ஜி.எஸ்.டி.,யில் புதிதாக 4 லட்சம் வணிகர்கள்
ஜி.எஸ்.டி., நடைமுறைக்குப் பின், தமிழகத்தில், 4 லட்சம் வணிகர்கள், புதிதாக பதிவு செய்துள்ளனர் என, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்துக்கு, 2016ம் ஆண்டு, செப்., 8ம் தேதி, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதன் படி, 2017, ஜூலை 1 முதல், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் படி, வணிகர்கள் பதிவு செய்ய, விற்பனை தொகைக்கான உச்ச வரம்பு, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இருந்த போதிலும், ஜி.எஸ்.டி., இணையதளம் மூலம், தமிழகத்தில் பல லட்சம் புதிய வணிகர்கள் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து, வணிக வரி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், வாட், சேவை, விற்பனை என, பலவித வரிகள் இருந்தன. ஜி.எஸ்.டி.,க்கு பின், அனைத்து வரிகளும், இதற்குள் கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை, 9.75 லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர். இதில், 5.75 லட்சம் வணிகர்கள், ஏற்கனவே பதிவு செய்து வரி செலுத்தி வந்தவர்கள்.
நான்கு லட்சம் வணிகர்கள், புதிதாக பதிவு செய்தவர்கள். இதில், மாநில மற்றும் மத்திய வரி வரம்புக்குள் உள்ள வணிகர்கள் அடங்குவர்.
மத்திய அரசு வரி விதிப்பு வரம்புக்குள், அதிகமான வணிகர்கள் சென்ற பின்னும், தமிழகத்துக்கான வரி வருவாய் உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அவகாசம் நீட்டிப்பு
வாட் உள்ளிட்ட பல்வேறு வரி வரம்பில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறிய வணிகர்கள்,
தங்களின் கணக்கு விபரங்களை மாற்றிக் கொள்ளவும், தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை திருத்திக் கொள்ளவும், 2019, மார்ச், 31 வரை அவகாசம் நீட்டித்து, மத்திய வரி விதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
– நமது நிருபர் –