ஆதார் தகவல்களை திருடுவது எளிது: ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தகவல்
டெல்லி: சந்தையில் 2,500 ரூபாய்க்கு கிடைக்கும் மென்பொருளை கொண்டு ஆதார் தகவல்களை இணையத்திலிருந்து எளிதாக திருடிவிட முடியும் என்று ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இணைய பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்பு அந்நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் படி ஆதார் விவரங்களை பொதுமக்களிடமிருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாஃப்ட்வேரை இந்த 2,500 ரூபாய் மென்பொருள் மூலம் திருடலாம். எந்த ஆதார் மையம் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜி.பி.எஸ் சேவையையும் இந்த மென்பொருள் மூலம் செயலிழக்கச்செய்யலாம். இதன் மூலம் எந்த நாட்டில் இருந்தும் ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடியும். இதுகுறித்து கேட்டதற்கு ஆதார் ஆணையம் பதிலளிக்க மறுத்துவிட்டதாக ஹஃபிங்டன் போஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது. வெறும் 2,500 ருபாய் செலவில் ஆதார் தகவல்களை பெற்று விட முடியும் என்பதால் 100 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.