பயங்கரவாதிகள் தாக்குதலில் ஆப்கனில் 19 பேர் பலி
ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தான் ஜலாலாபாதில் பள்ளிகள் முன் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.ஜலாலாபாத் மாலிகா ஓமாரியா பெண்கள் பள்ளி அருகே உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8:30 மணிக்கு முதல் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒரு மாணவரும் பொதுமக்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அருகில் உள்ள ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி குண்டை வெடிக்க செய்ததில் கூட்டத்தில் இருந்த பலர் பலியாகினர். இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஜலாலாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.மற்றொரு நகரான நங்கர்புர் பகுதியில் உள்ளூர் போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வெடிகுண்டு வெடித்ததில் 57 பேர் படுகாயமடைந்தனர்.இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.