நீட் தேர்வு வயது உச்சவரம்பு விவகாரம் 5 ஆண்டு தேர்ச்சி பட்டியலை தாக்கல் செய்ய சிபிஎஸ்இ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நீட் தேர்வு வயது உச்சவரம்பு விவகாரம் 5 ஆண்டு தேர்ச்சி பட்டியலை தாக்கல் செய்ய சிபிஎஸ்இ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘கடந்த 5 ஆண்டுகளில் நீட் உள்ளிட்ட மருத்துவ நுழைவுத்தேர்வு தேர்ச்சி பட்டியல் 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என சிபிஎஸ்இ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நீட் தேர்வு வயது உச்சவரம்பு அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘நீட் தேர்வை 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் எழுத முடியாது’ என கூறி, ‘பொதுப்பிரிவினருக்கு 25 வயது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயது என சிபிஎஸ்இ நிர்வாகம் பிறப்பித்த ஆணை செல்லும்’ என உத்தரவிட்டது.  உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேற்கண்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், ‘நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரையில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்தான் அதிகப்படியாக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் வயது வரம்பை தளர்த்திய உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ.பாப்டே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மேல் முறையீடு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் நீட் உள்ளிட்ட மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதியவர்களின் வயது பட்டியல் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடைந்த பட்டியலை அடுத்த 2 வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டனர்.

மூலக்கதை