இரண்டாவது முறையாக ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்

தினகரன்  தினகரன்
இரண்டாவது முறையாக ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்

பெலகாவி: கர்நாடகாவில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது முறையாக குழந்தை பெற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் யல்லவ்வா மயூர் கெய்க்வாட்(23). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கட்டிடத் தொழிலாளி. யல்லவ்வாவிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இரண்டாவது பிரசவத்திற்காக கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள ராய்பாக்கில் இருக்கும் தாய் வீட்டிற்கு யல்லவ்வா ரயிலில் வந்துள்ளார். மகாராஷ்டிரா எல்லையில் உள்ள ஹடகயேகளே ரயில் நிலையம் அருகே வந்தபோது ஓடும் ரயிலிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்கள். இந்நிலையில் அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான யல்லவ்வா பிரசவத்திற்காக  ராய்பாக்கில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஹரிபிரியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அவருடன் துணைக்கு அவரது அண்ணியும் வந்துள்ளார். ரயில் சின்சாலி அருகே காலை 9.30 மணிக்கு வந்தபோது யல்லவ்வாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. பொது பெட்டியில் யல்லவ்வா பயணம் செய்து கொண்டிருந்தார். பயணிகள் சிலர் எழுந்திருந்து அவருக்கு இடம் கொடுத்தனர். எனினும் பிரசவ வலி அதிகரித்த நிலையில் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்கள் சிலர் துரிதமாக செயல்பட்டு போர்வை மூலமாக ஒரு மறைப்பை உருவாக்கினார்கள். அங்கு யல்லவ்வாற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ராய்பாக் ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. உடனடியாக தாயும், சிசுவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூலக்கதை