சைவத்துக்கு பதில் அசைவ உணவு தந்த விமான நிறுவனத்திற்கு ரூ.65 ஆயிரம் அபராதம்

தினகரன்  தினகரன்
சைவத்துக்கு பதில் அசைவ உணவு தந்த விமான நிறுவனத்திற்கு ரூ.65 ஆயிரம் அபராதம்

அகமதாபாத்: சைவ உணவு சாப்பிடுபவருக்கு தவறுதலாக அசைவ உணவு பரிமாறிய விமான நிறுவனத்திற்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த பானுபிரசாத் ஜனி என்பவர், கடந்த 2016 ஆகஸ்ட் 20ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அவர் ஆசிய சைவ உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு தவறுதலாக அசைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பானுபிரசாத் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, பானுபிரசாத் முதலில் ஆசிய சைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், பின்னர், அவரது ஆர்டரை மாற்றியதாகவும் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட உணவு பொட்டலத்தின் மேலே, அது அசைவ உணவு என்று லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, ‘‘இது தவறான வணிக கொள்கை என்றுக் கூறி, பானுபிரசாத்திற்கு விமான நிறுவனம் ரூ.65 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

மூலக்கதை