பொது இடத்தில் வழிப்பாட்டுக்காக விநாயகர் சிலை வைக்க ஏன் தடை விதிக்க வேண்டும்? மனுதாரருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

தினகரன்  தினகரன்
பொது இடத்தில் வழிப்பாட்டுக்காக விநாயகர் சிலை வைக்க ஏன் தடை விதிக்க வேண்டும்? மனுதாரருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைக்க தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களை ஆக்கிரமித்து சிலைகள் வைக்கிறார்கள். சாலைகள் ஆக்கிரமித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெறாமலும் பல இடங்களில் சிலை வைக்கப்படுவதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, விதிமுறைகளுக்கு முரணாக பொது இடங்களில் சிலை வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் நேற்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழிபாட்டுக்காக ஏன் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது? அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது கொடுத்த விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா? மின்சாரத்தை திருட்டுத்தனமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தி பொது கூட்டங்கள் நடத்தவில்லையா? அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தவில்லையா?  இந்த வகையில் அரசு வகுத்துள்ள விதிகளின்படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது எப்படி சட்ட விரோதமாகும்? என்று கேள்வி எழுப்பியதுடன் பொது நல வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

மூலக்கதை