தெலங்கானாவில் கோர விபத்து : மலையில் பஸ் கவிழ்ந்து 52 பேர் சாவு

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் கோர விபத்து : மலையில் பஸ் கவிழ்ந்து 52 பேர் சாவு

திருமலை: தெலங்கானாவில் 20 அடி உயர மலையில் அரசு பஸ் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் 52பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், பலரது நிலை  கவலைக்கிடமாக உள்ளது.தெலங்கானா மாநிலம், சனிவாரம்பேட்டாவில் இருந்து  ஜகத்யாலா மாவட்டத்துக்கு 80 பயணிகளுடன் நேற்று கொண்டக்கட்டில் இருந்து அரசு  பஸ் புறப்பட்டது. தொடர்ந்து அரை கிலோமீட்டர் சென்ற நிலையில் எதிர்திசையில்  வந்த லோடு வேன் மீது மோதாமல் இருக்க டிரைவர், பிரேக் போட்டுள்ளார்.அப்போது  எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி 20 அடி  உயர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சின்  அடியிலும், பஸ்சிற்கு உள்ளேயும் சிக்கிய 26 பயணிகள் உடல் நசுங்கி ரத்த  வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த  கலெக்டர் சரத், எஸ்பி சிந்துசர்மா, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர்  நேரில் சென்று பார்வையிட்டு படுகாயமடைந்தவர்களை கடும் சிரமத்துக்கு பின்  பொதுமக்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் இணைந்து மீட்டு, ஜெகத்யாலா  கரீம்நகர், ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி  வைத்தனர். இதில், சிகிச்சை பலனின்றி மேலும் 26 பேர் பரிதாபமாக பலியாயினர்.  பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்  என்று அஞ்சப்படுகிறது.விபத்து குறித்து தகவல் அறிந்த இளைஞர்கள் தானாக  முன் வந்து அந்தந்த அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்ய குவிந்தனர்.  இறந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம்  நிவாரணம் வழங்குவதாக மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்தார்.அதிவேகமே விபத்துக்கு காரணம்விபத்து  குறித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், வழக்கமாக நாச்சிப்பேட்டை வழியாக  செல்ல வேண்டிய பஸ் கடந்த 5 நாட்களாக கொண்டக்கட்டு மலைப்பாதை வழியாக  திருப்பி விடப்பட்டு சென்று வருகிறது. கொண்டக்கட்டு ஆஞ்சநேயர் கோயில்  விழாவையொட்டி கூட்டம் அதிகமாக இருப்பதால் இவ்வாறு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கொண்டக்கட்டு மலைப்பாதை சாலையை  போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என கிடப்பில் போடப்பட்ட நிலையிலும்  அரசு போக்குவரத்துக்கழகத்தினர் கடந்த 5 நாட்களாக அந்த சாலையை  பயன்படுத்தியுள்ளனர். 54 பேர் செல்ல வேண்டிய பஸ்சில் கொண்டகட்டு ஆஞ்சநேயர்  கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என்று 80 பேர் பயணம்  செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்கு, பஸ் வேகமாக வந்ததும்,  அதிக பயணிகளை ஏற்றி வந்ததும் காரணமாக இருக்கலாம் என்று போலீசார்  தெரிவித்தனர். இதுகுறித்து ஜெகத்யாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை