தமிழகத்தில் ஒரு துறையில் இருந்து வேறு துறைக்கு மாறினாலும் இடஒதுக்கீடு தர உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ஒரு துறையில் இருந்து வேறு துறைக்கு மாறினாலும் இடஒதுக்கீடு தர உத்தரவு

புதுடெல்லி:  ‘தமிழக அரசு அலுவலகங்களில் ஒரு துறையில் இருந்து வேறு துறைக்கு பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கும் கண்டிப்பாக அவர்களுக்கான இடஒதுக்கீடு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும்’ எனஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு ஊழியர்கள் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு பதவி உயர்வு பெற்று இடமாறுதலில் செல்லும் போது ஏற்கனவே அந்த ஊழியருக்குரிய இடஒதுக்கீட்டை புதிய இடத்துக்கு செல்லும் போதும் கண்டிப்பாக தொடர்ந்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுபோல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உத்தரவிட்டு, மனுவை கடந்த 2006ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக தட்டச்சு பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தில், “தமிழகத்தில் ஒரு துறையில் இருந்து வேறு இடத்தில் உள்ள மற்றொரு துறைக்கு பணி இடமாறுதல் பெற்று செல்பவர்களுக்கு ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டையே தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அரசு பணியில் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு பணி இடமாறுதல் மூலம் சென்றாலும் அவர்களுக்கு உண்டான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.  இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தவுக்கு தடையும் விதித்தனர்.

மூலக்கதை