காவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி!!
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாகன சாரதி ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை பல மீட்டர்களுக்கு வீதியில் இழுத்துச் சென்றுள்ளார்.
Lille நகரின் மத்தியில், நகரமண்டபத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் blue C3 வகை மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். மகிழுந்துக்குள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். பல்வேறு சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு நிறுத்தாமல் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னரே காவல்துறையினர் அவர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்குள்ளாக மகிழுந்து போத்துவரத்து தடைக்குள் சிக்கிக்கொள்ள வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, உந்துருளி செல்லும் வீதியில் மகிழுந்தை செலுத்தியுள்ளார்கள். இதனால் மகிழுந்தின் பின்னர் மாட்டுப்பட்ட காவல்துறை அதிகாரி சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் மகிழுந்து நிறுத்தப்பட, அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.