ஸ்ரீகர் பரத் அபார சதம்: இந்தியா ஏ 505 ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
ஸ்ரீகர் பரத் அபார சதம்: இந்தியா ஏ 505 ரன் குவிப்பு

பெங்களூரு: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆலூர், கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 113* ரன் விளாசினார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் சமர்த் 83 ரன் (126 பந்து, 8 பவுண்டரி), ஈஸ்வரன் 86 ரன் (165 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 30, சுப்மான் கில் 6 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷ்ரேயாஸ் 42 ரன், கில் 50 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கவுதம் 20 ரன் எடுத்து டாக்கெட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சாஹர் 6 ரன்னில் வெளியேறினார். ஸ்ரீகர் பரத் - குல்தீப் யாதவ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 113 ரன் சேர்த்தது. குல்தீப் 52 ரன் எடுக்க, ஷாபாஸ் நதீம் டக் அவுட்டானார். பரத் 106 ரன் (186 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆஷ்டன் ஏகார் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்தியா ஏ அணி 144 ஓவரில் 505 ரன் குவித்து ஆல் அவுட்டானது. குர்பானி 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 159 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்துள்ளது. கை வசம் 8 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 121 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஆஸி. ஏ அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

மூலக்கதை