சரக்கு விமான சேவையில் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம்
புதுடில்லி:‘ஸ்பைஸ் ஜெட்’ விமான நிறுவனம், 18ம் தேதி முதல், தனியாக சரக்கு விமான சேவையை துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், இந்த சரக்கு போக்குவரத்து சேவைக்கு, ’ஸ்பைஸ் எக்ஸ்பிரஸ்’ என, பெயரிட்டுள்ளது.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இந்த சேவையை வழங்குவது குறித்து, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம், சரக்கு போக்குவரத்துக்கு என தனியாக ஒரு சேவையை வழங்குவது, இந்தியாவில்இதுவே முதல் முறையாகும்.
இந்நிறுவனம் சரக்கு சேவைக்காக முதலில், ‘போயிங் 737- – 700’ விமானத்தை பயன்படுத்த உள்ளது. 20 டன் எடை சரக்கை, இந்த விமானம் கையாளும்.வரும், 18ம் தேதியன்று ஆரம்பிக்கப்பட உள்ள இந்த சேவை, முதற்கட்டமாக டில்லி – பெங்களூரு இடையே வழங்கப்பட இருக்கிறது. விரைவில், கவுகாத்தி, ஹாங்காங், காபுல், அம்ரிஸ்டர் உள்ளிட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.தற்சமயம் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், நாள் ஒன்றுக்கு, 500 டன் சரக்குகளை கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.