BREAKING : மகிழுந்துடன் விமானநிலையத்துக்குள் நுழைந்த நபர்! - லியோனில் பரபரப்பு!!
சற்று முன்னதாக லியோன் விமான நிலையத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நபர் ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Lyon-Bron விமான நிலையத்துக்குள் மெர்சடைஸ் நிறுவனத்தின் மகிழுந்து ஒன்றின் மூலம் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தின் (Terminal 1 ) பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை பின்னால் காவல்துறையினரின் மகிழுந்தில் துரத்திச் சென்றார்கள். விமான நிலையத்துக்குள் நுழைந்த வாகனம், விமான ஓடுதளத்தில் ஏறி அங்கு வட்டமிட்டது. காவல்துறையினரும் பின்னால் துரத்திச் சென்றனர்.
சில நிமிடங்கள் கழித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த செயலுக்குரிய காரணங்களும் அறியமுடியவில்லை. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. விமான நிலையம் தற்போதுவரை மூடப்பட்டுள்ளது.