தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான்.
விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.