5வது டெஸ்ட்டின் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 174/6

தினகரன்  தினகரன்
5வது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 174/6

லண்டன்: இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது.கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் குக் 71, ஜென்னிங்ஸ் 23, மொயீன் அலி 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரூட், பேர்ஸ்டோ, கரன் ஆனியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஜோஸ் பட்லர் 11, அடில் ரஷித் 4 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.அடில் ரஷித் 15 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து பட்லருடன் ஸ்டூவர்ட் பிராடு ஜோடி சேர்ந்தார். இருவரும் 9வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 98 ரன் சேர்த்தனர். பட்லர் அரை சதம் அடித்து அசத்தினார். பிராடு 38 ரன் (59 பந்து, 3 பவுண்டரி), பட்லர் 89 ரன் (133 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 122 ஓவரில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கெட் (30-0-79-4), ஜஸ்பிரித் பூம்ரா, இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவான் 3 ரன் மட்டுமே எடுத்து பிராடு வேகத்தில் வெளியேற, கே.எல்.ராகுல் - செதேஷ்வர் புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. தேனீர் இடைவேளையின்போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 174 ரன்களை எடுத்துள்ளது இந்திய அணி. இதனால் இங்கிலாந்தை விட  158 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

மூலக்கதை