பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் ‘பாரத் பந்த்’: பெரும்பாலான கட்சிகள் ஆதரவு
புதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருவதை கண்டித்து, நாளை மறுநாள் ‘பாரத் பந்த்’ எனும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணமும் பல இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளன.
இது, பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 10ம் தேதி (நாளை மறுநாள்), நாடு தழுவிய ‘பந்த்’ நடத்தப்படும்’’ என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பிற கட்சிகளையும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தர அழைப்பு விடுத்துள்ளது.
அதையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளம், ஜேவிம், ஜேஎம்எம் உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83 ரூபாய் 54 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 76 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனையாகிறது.