உங்களுக்கு விரோதமாக யாராவது கோஷம் எழுப்பியிருந்தால் சும்மா இருப்பீர்களா? தமிழிசை கேள்வி

PARIS TAMIL  PARIS TAMIL
உங்களுக்கு விரோதமாக யாராவது கோஷம் எழுப்பியிருந்தால் சும்மா இருப்பீர்களா? தமிழிசை கேள்வி

விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பா.ஜனதாவை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஸ்டாலின் கண்டனம்

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், “ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று கூறினார்.

தமிழிசை கேள்வி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடம் பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,  பேச்சுரிமை என்பது எல்லோருக்கும் உண்டு, மேடையில் பேசட்டும். ஆனால் விமானத்தில் கத்துவது என்பது சரியானது கிடையாது. சோபியாவின் சமூக வலைதளத்தில் உள்ள கருத்துக்களை பார்க்கும் போது அவரை பின்னணியில் இருந்து யாரோ இயக்குவது தெரிகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கு நான் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். மற்ற கட்சி தலைவர்களிடம் வேறு யாரேனும் இப்படி நடந்து கொண்டால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா? உங்களை எதிர்த்து பேசியவரை மெட்ரோ ரெயிலில் அடித்தவர் நீங்கள்.

அப்போது எங்கே போனது கருத்து சுதந்திரம். உங்களுக்கு விரோதமாக யாராவது கோஷம் எழுப்பியிருந்தால் சும்மா இருப்பீர்களா?

மற்ற கட்சி தலைவர்களை இவ்வாறு பேசினார் ஒப்புக்கொள்வார்களா? சும்மா விட்டுவிடுவார்களா? ஒரு பெண் தலைவர் என்ற முறையில் எனக்கும் இந்த உரிமை உண்டு. சகிப்புத்தன்மை என்பது எங்களுக்கு மட்டும்தானா? உங்களுக்கு கிடையாது? எந்த விதத்திலும் நான் சட்டவிதிகளை மீறவில்லை. விமான நிலையத்தில் நான் புகாரளித்தேன். போலீசார் அதற்கு நடவடிக்கையை எடுக்கிறார்கள். என்னுடைய நடவடிக்கை சரியானதே. சட்டப்படிதான் என்னுடைய நடவடிக்கையை எடுத்துள்ளேன். மற்ற கட்சித் தலைவர்கள் ஒன்றாக பயணம் செய்யும்போது பேச்சுரிமை என்று சண்டை போட்டுக் கொள்ளலாமா?

 புகார் அளித்துவிட்டு என்னுடைய வேலையை பார்க்க நான் சென்றுவிட்டேன். பேச்சுரிமை சுதந்திரம் என்பது விமானத்திற்குள்ளேவா? உங்கள் பக்கத்தில் ஒருவர் கோஷமிட்டால் சும்மா இருப்பீர்களா? அது அனைவருக்கும் பொதுவான இடமாகும். நான் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றால் வேறு எவ்வளவோ வழிகளில் கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

வாபஸ் வாங்க முகாந்திரம் உண்டா? என்ற கேள்விக்கு இல்லை. வாபஸ் வாங்க மாட்டேன் என்று பதிலளித்துள்ளார்.

மூலக்கதை