1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

ஹரிஸ்பர்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள், 70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஜூரி அறிக்கை அமெரிக்காவை உலுக்கியுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த எட்டு டையோசிஸ்கள் உள்ளன. அவற்றில், 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில், 6 டையோசிஸ்களின் சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரை, அந்த மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட்டுக்கு உட்பட்ட ஜூரி அமைப்பு இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன், இதுபோல் ஜூரி அமைப்பு விசாரணை நடத்துவது, அந்த மாகாண நடைமுறை. 900 பக்கங்கள் கொண்ட இந்த விசாரணை அறிக்கையை ஆக.14ம் தேதி பென்சில்வேனியா அட்டர்னி ஜெனரல் ஜோஸ் ஷாபிரோ வெளியிட்டார். அறிக்கை விபரம்:

1940ம் ஆண்டு முதல், 70 ஆண்டுகளாக 300 பாதிரியார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களில் பலர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர்.

டான்சில் ஆப்பரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஏழு வயது சிறுமியை, பார்க்க சென்ற பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மற்றொரு பாதிரியார், 9 வயது சிறுவனை செக்ஸ்சுக்கு வற்புறுத்தியுள்ளார். மற்றொரு பாதிரியார் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவனை பாவ மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இரண்டு பாதிரியார்கள், சிறுமிகளை கர்ப்பமாக்கி உள்ளனர். ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி உள்ளனர். இன்னொரு சிறுமிக்கு ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி பல கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன.

தப்பிய பெரிய மனிதர்கள்

பாலியல் புகார்கள் வர துவங்கியதும் கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், பல பெரிய மனிதர்கள் தப்பி விட்டனர். சிறுவர்களையும், சிறுமிகளையும் பாதிரியார்கள் சீரழிப்பது ஒருபுறம் நடந்த வண்ணம் இருக்க, இது பற்றி வாடிகன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பாதிரியார்களை கட்டுப்படுத்த வேண்டிய 'மனித கடவுள்'கள் ஒன்றுமே செய்யவில்லை; அனைத்தையும் மூடி மறைக்க மட்டும் செய்தனர்.
இவ்வாறு பல, பகீர் தகவல்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மூலக்கதை