ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க பரிந்துரை

தினகரன்  தினகரன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க பரிந்துரை

டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக  ராஜீவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகளை விடுவிக்க கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார். “ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசு ஒத்துப் போகவில்லை. மத்திய அரசின் பரிந்துரைபடியே முடிவு எடுக்கப்பட்டது” என்று தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இந்த தகவல் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.வழக்கின் விவரம் :கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மூலக்கதை