தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி பாதிப்பு
தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்த இருந்த, 10 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு, நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், ‘நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு’ என்ற சட்டத்தை, 2013ல், மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
புதிய சட்டத்தில் இருந்து, மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நலச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு விலக்கு பெறும் வகையில், 2015ல், 105 (அ) என்ற புதிய சட்டப் பிரிவை தமிழக அரசு சேர்த்தது.
இந்நிலையில், தமிழக அரசு இயற்றிய புதிய பிரிவை ரத்து செய்து, சென்னை, உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதன்படி, கையகப்படுத்தும் பணிகள் முடிந்திருந்தால், இந்த தீர்ப்பு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுஉள்ளது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவையடுத்து, 2013, ஆக.,க்கு பின், நிலம் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலைகள் அமைக்க போதிய நிலம் இருந்தால் மட்டுமே, பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –