தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகளில் 2013ம் ஆண்டுக்கு பின் உதவி பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர மாநில அரசு நடத்தும் செட் தேர்வு அல்லது தேசிய அளவில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல்லது அத்துடன் பி. எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2010ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகள் பெரிய அளவில் நிரப்பப்படவில்லை. 2010, 2012ம் ஆண்டுகளில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் செட் தேர்வு நடத்தியது.

2013ம் ஆண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டு 2015ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே ஆயிரம் பேர் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

2016 முதல் 2018 வரை 3 ஆண்டுகள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.

தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பி. எச்டி முடித்தும் 35,000 பேர் வரை உதவி பேராசிரியர் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர். செட், நெட், பி. எச்டி தேர்ச்சி பெற்ற 35,000 பேரில் 5 ஆயிரம் பேர் வரை தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்துக்கு பணிசெய்து வருகின்றனர்.

மற்றவர்கள் தங்களின் படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

இவ்வாறு தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கூறினர்.

.

மூலக்கதை