சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் இதுவரை 140 குழந்தைகள் பலி

தினகரன்  தினகரன்
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் இதுவரை 140 குழந்தைகள் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் கண்ணி வெடி தாக்குதலில் குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர். பின்னர் டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர். இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணி வெடிகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள்  புதைத்து விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 3 குழந்தைகள் பலியாகினர். மார்ச் 6-ம் தேதி நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடந்த தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் பலியாகினர். இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்க கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 39 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் இதுவரை சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 140 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இப்படி தொடர்ந்து கண்ணிவெடி தாக்குதல் மற்றும் வெடிவிபத்தில் அப்பாவி மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை