உலக கோப்பை போட்டி தோல்விக்காக பதவியில் இருந்து விலக முடியாது! பாக். கேப்டன் திட்டவட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை போட்டி தோல்விக்காக பதவியில் இருந்து விலக முடியாது! பாக். கேப்டன் திட்டவட்டம்

கராச்சி:  ‘பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இல்லை’ என பாகிஸ்தான் அணியின் கேப்டனான சர்பராஸ் அஹமது தெரிவித்தார். உலக கோப்பை லீக் தொடரில் 5 வெற்றி மற்றும் நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளையும் பெற்றும் கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

புள்ளி பட்டியலில் ‘நெட் ரன்ரேட்’ குறைவாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகள் என்று தொடர் தோல்விகளுக்கு பிறகு வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தியது.

தொடரின் முதற்பாதியில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி, பின்னர் அதிலிருந்து மீண்டெழுந்து பிற்பாதியில் சிறப்பாக ஆடியது.

இதில், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தலைமையிலான அணி மற்றும் அவரது ‘பிட்னெஸ்’ ஆகியவை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தி அணியை தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெறும் அளவிற்கு சர்பராஸ் செயல்பட்டார்.

இந்நிலையில், உலக கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி, நாடு திரும்பியது.

கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்பராஸ் அகமது, ‘‘தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகமாட்டேன். ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எனது ஆட்டம் எனக்கு திருப்திகரமாக உள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே முடிவு செய்யட்டும். இங்கிலாந்துடன் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக நான் நினைக்கவில்லை.

இங்கிலாந்து அணி அந்த வெற்றிக்கு தகுதியானது தான்’’ என்றார்.

.

மூலக்கதை