ஈராக் மலையில் ராமர், ஹனுமன் சிற்பங்கள்?

தினமலர்  தினமலர்
ஈராக் மலையில் ராமர், ஹனுமன் சிற்பங்கள்?

குர்திஸ்தா: மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் மலை ஒன்றில் ஹிந்துக் கடவுளான ராமரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதை இந்தியக் குழு கண்டுபிடித்துள்ளது.


இந்தியாவில் இருந்து 3745 கி.மீ. தொலைவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் ஹோரன் ஷேகான் பகுதியில் உள்ள தர்மான்டி - ஐ - பெலுலா மலையின் உச்சிப் பகுதியில் ஹிந்துக் கடவுள் ராமரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக 'அயோத்தி ஷோத் சன்ஸ்தான்' என்ற உத்தர பிரதேச மாநில அரசின் கலாசார ஆய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் முயற்சியால் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் ஒரு சிறப்பு குழு ஈராக்குக்கு சென்றது. ஈராக்கிலிருக்கும் இந்தியத் தூதர் பிரதீப் சிங் ராஜ்புரோஹித் எப்ரில் தூதரகத்தின் இந்திய அதிகாரி சந்திரமவுலி கரண் சுலைமானியா பல்கலை வரலாற்று ஆய்வாளர் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியின் கவர்னர் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு செய்தனர்.

அங்கு மலை உச்சியில் ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் அம்பு மற்றொரு கையில் வாள் முதுகில் அம்புகள் உள்ள அம்பாரியுடன் அந்த உருவம் உள்ளது. அருகில் காலடியில் ஒருவர் குனிந்து இருப்பது போல் உள்ளது.'இந்த கற்சிற்பம் ராமர் மற்றும் ஹனுமன்' என அயோத்யா ஷோத் சன்ஸ்தான் அமைப்பினர் நம்புகின்றனர். ஆனால் இதை ஈராக்கின் தொல்லியல் துறை மறுத்துள்ளது. அந்த சிற்பத்தில் உள்ளவர் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் என்றும் போரில் வென்ற அவரை வீரர் ஒருவர் வணங்குகிறார் என்று தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.


இது குறித்து அயோத்யா ஷோத் சன்ஸ்தான் நிர்வாகிகள் கூறியதாவது: இந்த கற்சிற்பம் ராமர் மற்றும் ஹனுமன் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்போது தான் நமது நாட்டின் பாரம்பரியம் வரலாற்று உண்மைகள் வெளிவரும். இந்த ஆய்வின் மூலம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் மற்றும் மெசபடோமியா நாகரிகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் தெரிய வரலாம். கி.மு. 4500 முதல் கி.மு. 1900 வரை மெசபடோமியா பகுதியை சுமேரியன்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களில் பெரும்பாலானவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள் அதிலும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கான ஆதாரமாக இந்த மலை கற்சிற்பம் விளங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை