ஹிந்தி கட்டாயமில்லை: யு.ஜி.சி., தலைவர்

தினமலர்  தினமலர்
ஹிந்தி கட்டாயமில்லை: யு.ஜி.சி., தலைவர்

புதுடில்லி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருந்தது. அதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மறைமுகமாக ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது என கட்சிகள் போர்க்கொடி துாக்கின. அதையடுத்து அந்த வரைவு திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.


இந்நிலையில் 2018 அக்டோபரில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. அனுப்பிய கடிதத்தில் 'இளநிலை பட்டப்படிப்பில் ஹிந்தி மொழியை பாடமாக ஆக்கலாமா என்பதை அந்தந்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம்' என தெரிவித்திருந்தது.

அதுகுறித்து விவாதிக்க டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபத்தில் முன்வந்த போது இதை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து 'வலுக்கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படாது' என அந்த பல்கலை தெரிவித்தது; இதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.


இந்நிலையில் யு.ஜி.சி. செயலர் ரஜ்னிஷ் ஜெயின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகள். குறிப்பிட்ட பாடத்தை தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் பல்கலைகள் மீது விதிக்கப்படவில்லை. ௨௦௧௮ல் யு.ஜி.சி. அனுப்பிய கடிதத்தில் உள்ள அம்சங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை; விருப்பமிருந்தால் பின்பற்றலாம் என்றார்.

மூலக்கதை