தணிக்கை விதியை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன் : பார்த்திபன்

தினமலர்  தினமலர்
தணிக்கை விதியை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன் : பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி உள்ள படம் ஒத்த செருப்பு. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்திருக்கிறார். இது பார்த்திபன் மட்டுமே நடித்து, இயக்கி இருக்கும் படம். இந்தப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கி உள்ளது. இதுகுறித்து பார்த்திபன் கூறியதாவது:

நான் வழக்கமாக ஒரு கதையை உருவாக்கும் போது, தணிக்கை சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், கதை அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்கு தணிக்கை குழுவில் 'யு' சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் உள்ளன, ஒன்று தணிக்கை குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அவர்களிடம் முன்வைக்க ஒரு மாணவரை போல ஆர்வமாக காத்திருக்கிறேன், விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்.

ஒற்றை கதாபாத்திரம் கான்செப்டை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் சில படங்கள் வந்துள்ளன. அதன் வெற்றிகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒத்த செருப்பு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ஒரு அற்புதமான தொழில்நுட்பக் குழுவையே சாரும். படத்தின் இறுதி வடிவத்தை நான் காணும்போது, நிச்சயமாக அது எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு பதிப்பாக அமைந்திருக்கிறது. என்றார்.

மூலக்கதை