பாரிமுனையில் பரபரப்பு பிரபல தனியார் ஓட்டலில் தீ: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரிமுனையில் பரபரப்பு பிரபல தனியார் ஓட்டலில் தீ: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் பிரபல தனியார் ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, பாரிமுனை குறளகம் எதிரே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஓட்டலின் பின்புறமுள்ள தனியார் நிறுவனத்தின்   ஏசி மிஷின் வெடித்து அவற்றின் தீப்பொறி ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரில் விழுந்துள்ளது. இதனால் ஜெனரேட்டர் தீப்பற்றி எரிந்தது.

தீவிபத்தை அறிந்ததும் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்களும், ஊழியர்களும் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடிவந்தனர். தீவிபத்து குறித்து அக்கம்பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



அதன்படி உயர்நீதிமன்றம் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் ஜெனரேட்டர் முழுவதும் எரிந்து சேதமானது.

சேதமதிப்பு ₹5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.   இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் வண்ணாரப்பேட்டை சிமிட்ரி சாலையோரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீ பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும்  வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் டிரான்ஸ்பார்மரின் ஒரு பகுதி எரிந்து சேதமானது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


.

மூலக்கதை