வேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் பறிமுதல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜரை போலீசார் கண்டுபிடித்தனர். வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை கண்காணிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் மற்றும் சிம்கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பிளாஸ்டிக் கவரில் போட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த 8 சிம்கார்டுகளை சிறை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிம்கார்டுகள் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது, அதில் தொடர்பு கொண்டு பேசிய எண்கள் குறித்து சைபர் க்ரைம் உதவியுடன் பட்டியல் தயாரித்து வருகின்றனர். நேற்று மாலை சிறை வளாகத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் ஆகியவற்றை சிறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் நேற்றிரவு புகார் அளித்தனர். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிக்கியுள்ளது. அடுத்தடுத்து செல்போன்கள் சிக்குவதால் சிறையில் உள்ள போலீசார் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பேரில் சிறை வளாகம் முழுவதும் நவீன கருவிகள் வைத்து ஸ்கேன் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செல்போன், கஞ்சா சோதனை செய்யும் கியுஆர்டி பிரிவில் உள்ளவர்களிடம் தகவல்களை திரட்டுவதில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

.

மூலக்கதை