சந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் முடிவு

தினமலர்  தினமலர்
சந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் முடிவு

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு, அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டியுள்ள சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள, மாநாட்டு மண்டபத்தை இடிக்க, இப்போதைய முதல்வர், ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார்.
ஆந்திர மாநில தலைநகர், அமராவதியில், கலெக்டர்கள் மாநாடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று(ஜூன் 24) நடந்தது. 'பிரஜா வேதிகா' என்ற அரங்கில், அந்த மாநாடு நடந்தது.

அதில், முதல்வர், ஜெகன் மோகன் பேசியதாவது:முந்தைய அரசு கட்டிய, அங்கீகாரமில்லாத கட்டடத்தில் அமர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணா நதிக் கரையோரம் எந்த கட்டடங்களும் கட்டப்படக் கூடாது என, ஒழுங்குமுறை விதிமுறைகள் கூறுகின்றன. அதை மீறி, இந்த பிரமாண்ட கட்டடத்தை, முந்தைய அரசு கட்டியுள்ளது.இதில், நாளை (இன்று) போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. அது தான், இங்கு நடக்கும் கடைசி கூட்டம். அதற்குப் பின், இந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்படும்.அதுபோல, கிருஷ்ணா நதி கரையோரம் உள்ள அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும். அந்தப் பணிகள், புதன் கிழமை முதல் துவங்கும்.இவ்வாறு ஜெகன் மோகன் கூறினார்.



பிரஜா வேதிகா அருகே, சந்திரபாபு நாயுடு, பிரமாண்ட பங்களா கட்டியுள்ளார். அவ்வப்போது வந்து ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டுள்ள அந்த பங்களா வீடும், இடிக்கப்பட உள்ளது.

இது குறித்து, சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி, எம்.எல்.ஏ., கோரந்தலா புச்சையா சவுதாரி கூறியதாவது:மக்கள் நலனுக்காக, பிரஜா வேதிகா கட்டப்பட்டு உள்ளது. தனிநபர் பயன்பாட்டில் அது இல்லை. அதுபோல, கிருஷ்ணா நதிக்கரையோரம் பல கட்டடங்கள், பல ஆண்டுகளாக உள்ளன. அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவற்றையும், ஜெகன் இடிப்பாரா?இந்த கட்டடங்களால், எனக்கு தெரிந்து, 50 ஆண்டுகளாக, கிருஷ்ணா நதி ஓட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான, மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளார்.

மூலக்கதை