ஜி20க்கு போனா... இந்தியா-ரஷ்யா-சீனா

தினமலர்  தினமலர்
ஜி20க்கு போனா... இந்தியாரஷ்யாசீனா

புதுடில்லி : ஜப்பானில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்காவின் வர்த்தகப்போரை சமாளிப்பது குறித்து,இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய 3 தலைவர்களும் முத்தரப்பு பேச்சு நடத்த உள்ளனர். இது அமெரிக்க வியாபார தந்திர நடவடிக்கைக்கு எதிரான புதிய அணிச்சேர்க்கையாக பார்க்கப்படுகிறது.


ஜி-20 மாநாடு :

ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேசும்போது, இரு நாடுகளிடையேயான வர்த்தகப் போருக்கு முடிவு கட்டப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வர்த்தகப்போர் ;

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வர்த்தகப்போர் நடந்து வருகிறது. அதேநேரத்தில் சமீபத்தில் இந்தியாவிற்கான முன்னுரிமை வர்த்தகநாடு என்ற அந்தஸ்தையும் ரத்து செய்தது. இதேபோல அமெரிக்க ரஷ்யா இடையிலும் பனிப்போர் நடந்து வருகிறது.

முத்தரப்பு பேச்சு :

இந்த நிலையில், ஒசாகாவில் மோடி, ஜின்பிங், புதின் ஆகிய 3 தலைவர்கள் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதை, சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் சாங்-ஜுன் உறுதிப்படுத்தியுள்ளார். பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் பிஷ்கெக் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 3 தலைவர்களும் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.


ஒருசார்பு தொழிற்காப்பு

ஒசாகாவில் 3 தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது, தற்போதுள்ள சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல், ஒரு குறிப்பிட்ட நாடு பின்பற்றும் ஒருசார்பு, தொழிற்காப்புவாதம், ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் பாதிப்புகளை சர்வதேச சமூகம் முழுமையாக உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.

பொருளாதார அச்சுறுத்தல் :

அந்த நாடு வர்த்தக கூட்டாளிகளை நடத்தும் முறை உலக வர்த்தகம், முதலீடு, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த போக்கை எதிர்ப்பதில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய 3 நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம், அமெரிக்காவின் வர்த்தகப் போர் குறித்து மூன்று தலைவர்கள் சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை