11 மாவட்டங்களில் இன்று லேசான மழை

தினமலர்  தினமலர்
11 மாவட்டங்களில் இன்று லேசான மழை


சென்னை:'தமிழகத்தில், 11 மாவட்டங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த மையம் கூறியுள்ளதாவது:தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் பகுதியில் தீவிரமாகியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், வெப்பச்சலன மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, வேலுார் மாவட்டம், சோளிங்கரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.


ஆர்.கே.பேட்டை, 3; நீலகிரி தேவாலா, திருத்தணி, 2; போளூர், அரக்கோணம், சென்னை விமான நிலையம், வந்தவாசி, செஞ்சி, ஓசூர், மரக்காணம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
இன்றைய வானிலையை பொறுத்தவரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, 11 மாவட்டங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்; மற்ற இடங்களில், பரவலாக வெயில் நிலவும். இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

மூலக்கதை