பிரக்யா சிங் கோரிக்கை; கோர்ட் நிராகரிப்பு

தினமலர்  தினமலர்
பிரக்யா சிங் கோரிக்கை; கோர்ட் நிராகரிப்பு

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு, ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரிய, பா.ஜ., - எம்.பி., பிரக்யா சிங் தாக்குரின் மனுவை, என்.ஐ.ஏ., நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மஹாராஷ்டிர மாநிலம், மாலேகான் நகரின், மசூதி ஒன்றின் அருகே, 2008ல், பயங்கர குண்டு வெடித்தது. அதில், ஆறு பேர் இறந்தனர்; 100 பேர் படுகாயம் அடைந்தனர்.மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப்படை போலீசார், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் உட்பட, ஏழு பேரை கைது செய்தனர். மும்பையில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமையின், சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலம், போபால் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட பிரக்யா, காங்., வேட்பாளர் திக்விஜய் சிங்கை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, பிரக்யாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள், சரியாக ஆஜராகாததால், விசாரணைக்கு, வாரம் ஒரு முறையாவது ஆஜராக வேண்டும் என, பிரக்யா சிங் உட்பட, ஏழு பேருக்கும், மே 17ல், நீதிபதி உத்தரவிட்டார்.


இந்நிலையில், 'தேர்தலுக்காக, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை நீட்டிக்க வேண்டும்' எனக் கோரி, பிரக்யா சிங் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், பிரக்யா சிங் தாக்கல் செய்த மனுவில், 'எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், சில நடைமுறைகளை பூர்த்தி செய்ய, டில்லியில் தங்கியிருப்பது அவசியமாக உள்ளது. என் உடல் நிலை சரியில்லாததால், அடிக்கடி என்னால் பயணம் செய்ய முடியாது.

'அதனால், வாரம் ஒரு முறை, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, பிறப்பித்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி, வி.எஸ்.படால்கர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பிரக்யா சிங்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.

மூலக்கதை