ஏ.என்.-32 விமானம் விபத்து: உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
ஏ.என்.32 விமானம் விபத்து: உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்கள் மீட்பு

சியாங்: ஏ.என்- 32 விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருணாச்சலில் விபத்து நடைபெற்ற இடத்தில் 6 பேரின் உடல்கள் மற்றும் 7 பேரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி பகல் 12.27 மணிக்கு புறப்பட்டு சென்றது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேன்சுக்கா என்ற ராணுவ தளத்துக்கு சென்ற இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற 35 நிமிடத்துக்கு பின்னர் விமான கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், விமானத்தின் நிலை குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. இதையடுத்து, சுகோய் 30 மற்றும் C-130J ஹெர்குலஸ் ரக விமானப்படை விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதேபோல், தரைப்பகுதியில் இந்திய ராணுவமும், இந்தோ-திபெத் எல்லைப் பகுதி போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மோசமான வானிலை காரணமாக காணாமல் போன விமானத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. 8 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில், 13 பேரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகி 17 நாட்கள் கழித்து 6 பேரின் உடல் மற்றும் 7 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மூலக்கதை