சோமாலியா அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 11 பேர் பலி... பாதுகாப்பு தீவிரம்

தினகரன்  தினகரன்
சோமாலியா அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 11 பேர் பலி... பாதுகாப்பு தீவிரம்

மோகாதிஷு: சோமாலியா நாட்டில் அதிபர் மாளிகை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோமாலியா நாட்டில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார், பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் மொகாதீசுவில் அதிபர் மாளிகைக்கு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, போலீஸ் சோதனை சாவடி முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சில மணி நேரத்திற்குள் மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பரபரப்பான சாலையில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மூலக்கதை