அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பார்த்தசாரதி கோயில் பிரசாத கடை ஏலம் ரத்து: அறநிலையத்துறையில் பரபரப்பு
சென்னை: அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக பார்த்தசாரதி ேகாயில் பிரசாத கடைகளின் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 100க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. இந்த கடை, வீடு பொது ஏலம் விட்டு தான் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ தரப்படுகிறது. இந்த நிலையில், கோயிலில் பிரசாத கடை மற்றும் முடி குத்தகை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்தில் 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மண்டல இணை ஆணையர், கோயில் நிர்வாக அலுவலர், மண்டல ஆய்வாளர் முன்னிலையில் மதியம் 12 மணிக்கு ஏலம் விடுவதாக இருந்தது. ஆனால், மண்டல இணை ஆணையர் 12 மணிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது காலை 11.45 மணியளவில் ஏலத்தை தொடங்க உத்தரவிட்டார். ஆனால், ஆய்வாளர் வந்தால் மட்டுமே ஏலம் விட முடியும் என கோயில் நிர்வாக அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆய்வாளர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து இணை ஆணையர் அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மண்டல இணை ஆணையர் இல்லாமல் ஏலம் விடக்கூடாது என்பதால் பிரசாத கடைக்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் மறு அறிவிப்பு வெளியிட்டு அதன்பிறகு ஏலம் நடத்தவேண்டும்.அதிகாரிகள் இடையே இருந்த மோதல் காரணமாக நடைபெறவிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்று அதிகாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ₹30 லட்சத்தை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்ேபாது ஏலம் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கில் அதற்காக செலவு செய்த பணம் வீணாகி போய் விட்டது’ என்றார்.