வீட்டுவாசலில் ஏற்றிவைத்திருந்த விளக்கு தீயில் கருகிய சிறுமி பரிதாப சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டுவாசலில் ஏற்றிவைத்திருந்த விளக்கு தீயில் கருகிய சிறுமி பரிதாப சாவு

திருவள்ளூர்: வீட்டுவாசலில் ஏற்றிவைத்திருந்த விளக்கின் தீயில் உடல்கருகிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (40).

இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா (35).

இவர்களது மகள் ரித்திகா (7). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டின் வாசலில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுள்ளனர். அப்போது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமி, வீட்டுக்குள் செல்வதற்காக ஓடிவந்துள்ளாள்.

அப்போது, வீட்டு வாசலில் ஏற்றி வைத்திருந்த விளக்கின் தீபம், ரித்திகாவின் துணியில்பட்டு தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் உடலில் தீப்பற்றி சிறுமி அலறி துடித்தாள்.

பலத்த தீக்காயம் அடைந்த வலியால் சிறுமி சத்தம் போட்டாள். இதனால் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர்.

பின்னர் சிறுமியை மீட்டு உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரித்திகா பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை