விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் இரங்கல்

விக்கிரவாண்டி : புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி இன்று அதிகாலை உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி (69).

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்வு பெற்றார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த 2 வருடத்துக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து ஓய்வில் இருந்தார்.

கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமாகவே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவையொட்டி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொன்முடி எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ராதாமணி எம்எல்ஏ விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை குப்புசாமி, தாய் மீனாட்சி. விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத்தலைவராக கட்சி பொறுப்பில் உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை விட 7 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.


.

மூலக்கதை