ரூ.98,000 கோடி மோசடியா? 'இந்தியாபுல்ஸ்' புதிய மனு

தினமலர்  தினமலர்
ரூ.98,000 கோடி மோசடியா? இந்தியாபுல்ஸ் புதிய மனு

புதுடில்லி: 'பொதுமக்களிடம் இருந்து பெற்ற முதலீடுகளில், 98 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, 'இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்' நிறுவனம், புதிய மனு தாக்கல் செய்துள்ளது.


கட்டுமானத் துறைக்கு நிதி அளிக்கும், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், 98 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, சமீபத்தில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள, அபய் யாதவ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சமீர் கெலாட் மற்றும் அவருடைய குடும்பத்தார், ஸ்பெயினைச் சேர்ந்த, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மூலம், பல போலி பெயர்களில் நிறுவனங்களை துவக்கியுள்ளனர். அந்த நிறுவனங்களுக்கு, இந்தியாபுல்ஸ் நிறுவனம் கடன் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் தயாரித்துள்ளனர். கடன் வாங்கிய அந்த நிறுவனங்கள், அந்தப் பணத்தை, சமீர் கெலாட் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளன.

இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து முதலீடுகள் பெற்றுள்ள, இந்தியாபுல்ஸ் நிறுவனம், 98 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதைத் தவிர, 1,700 கோடி ரூபாய் கறுப்பு பணம், இந்த போலி நிறுவனங்கள் மூலம், வெள்ளை ஆக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் முதலீட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அடங்கிய, கோடை விடுமுறை கால உச்ச நீதிமன்ற அமர்வில், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஏ.எம். சிங்வி, புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: இந்தியாபுல்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விபரம், பத்திரிகைகளில் வந்துள்ளது. அதனால், நிறுவனத்துக்கு, 7,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டு, பொய் வழக்கு. அதனால், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். முழு ஒத்துழைப்பையும் அளிக்க, நிறுவனம் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை