ஹாங்காங்கில் போராட்டம் தீவிரம்: மசோதாவை ஒத்திவைத்தது சீனா

தினமலர்  தினமலர்
ஹாங்காங்கில் போராட்டம் தீவிரம்: மசோதாவை ஒத்திவைத்தது சீனா

ஹாங்காங் :சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது. பார்லியை முற்றுகையிட முயன்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போராட்டம் வலுவடைந்து வருவதால் மசோதாவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.


அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குற்றச்சம்பவங்களில் விசாரணைக்காக சீனாவிற்கு கொண்டு செல்லப்படுவர்.இதற்கு ஹாங்காங்கைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசியல் ரீதியில் பழிவாங்க எங்களை சீனாவுக்கு கடத்துவதற்கு இது வழிவகுத்து விடும்' என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.அதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் 'எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்படும்' என ஹாங்காங்கின் நிர்வாகத்தை கவனிக்கும் பெண் தலைவர் கேரி லேம் உறுதியுடன் கூறியிருந்தார்.

அந்த நாட்டு பார்லியில் இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடத்தப்படும்; வரும் 20ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கேரி லேம் உட்பட பலர் சீனா ஆதரவாளர்கள் என்பதால் இந்த மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.அதனால் பார்லிமென்ட் கூடுவதற்கு முன்பாக மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவிக்க கோரி போராட்டக்காரர்கள் காலக்கெடு விதித்திருந்தனர்.

நேற்று இந்தக் காலக்கெடு முடிவுக்கு வந்ததால் பார்லிமென்ட் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் கூடினர்.ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பதற்றம் நிலவியது. பார்லிமென்ட் கூடுவதற்கு முன்பாக அதற்குள் நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றனர். முதலில் தடியடி நடத்தப்பட்டது. ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் மிளகு தூள் வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.இதற்கிடையே மசோதா மீதான விவாதம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மறுதேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.இருந்தாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலைகளில் குவிந்துள்ளனர். மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.


மூலக்கதை