வங்கிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 2.05 லட்சம் கோடி மோசடி: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் 2.05 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி நடந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வராக்கடன்களால் வங்கிகளின் நிலை மோசமாக உள்ளது. சில வங்கிகளுக்கு மத்திய அரசு மூலதன நிதி வழங்கி வருகிறது. கிங்பிஷர் அதிபர் மல்லையா, நீரவ் மோடி, வைர வியாபாரி ஜதின் மேத்தா போன்றோர் மோசடிகளால் வங்கிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கி நிதி மோசடி தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, 11 ஆண்டுகளில் அதாவது, 2008-09 நிதியாண்டில் இருந்து 2018-19 நிதியாண்டு வரை மொத்தம் 53,334 வழக்குகளில் ₹2.05 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது. அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் ₹5,033.81 கோடி மோசடி நடந்துள்ளது. 6,811 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த நிதியண்டில் ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் 6,801 வழக்குகளில் மொத்தம் 71,542.93 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 2008-09ல் 4,372 வழக்குகளில் ₹1,860.09 கோடி, 2009-10ல் 4,669 வழக்குகளில் ₹1,998.94 கோடி 2010-11ல் 4,534 வழக்குகளில் ₹3,815.76 கோடி, 2011-12ல் 4,093 வழக்குகளில் ₹4,501.15 கோடி, 2012-13ல் 4,235 வழக்குகளில் ₹8,590.86 கோடி, 2013-14ல் 4,306 வழக்குகளில் ₹10,170.81 கோடி 2014-15 நிதியாண்டில் 4,639 வழக்குகளில் ₹19,455.07 கோடி, 2015-16ல் 4,693 வழக்குகளில் ₹18,698.82 கோடி, 2016-17ல் 5,076 வழக்குகளில் ₹23,933.85 கோடி, 2017-18ல் 5,916 வழக்குகளில் ₹41,167.03 கோடி மோசடி நடந்துள்ளது என வங்கிகள் சமர்ப்பித்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.