நிரவ் மோடிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

தினமலர்  தினமலர்
நிரவ் மோடிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,600 கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி, நிரவ் மோடி மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தன. இந்த நிலையில், அவர், லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதையடுத்து, நிரவ் மோடி மீது, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாமின் கோரி, அவர் மூன்று முறை மனு தாக்கல் செய்தும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த நிரவ் மோவியின் அப்பீல் மனு மீதான விசாரணை முடிவை நீதிபதி இங்கிரிட் சிம்லர் இன்று வெளியிட்டார்.

இதில், நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான மோசடி வழக்குகளின் விசாரணைக்கு அவர் இடையூறாக இருப்பார் என்பதை ஆதாரங்கள் அனைத்தும் உறுதி செய்கின்றன. இதன் காரணமாக அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியின் ஜாமின் மனுவை 4 வது முறையாக லண்டன் கோர்ட் நிராகரித்துள்ளதால் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.

மூலக்கதை