தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்கு திருமணம் செய்த இன்ஜினியர்: கொல்லத்தில் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: தனக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த இன்ஜினியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டியம் பகுதியை சேர்ந்தவர் மினி (44). இவர் பள்ளி ஆசிரியை.
இவரது முதல் கணவன் தர். இவரது மகன் கோகுல் (23).
தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஸ்ரீதர் தினமும் மினியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதன்காரணமாக மினி தனது ஆசிரியை பணியையும் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகும் நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததால் மினி கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.
அப்போது கோகுல் 10ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் உறவினர் வீடுகளில் தங்கினர்.
விவகாரத்து வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு வீடு கிடைத்தது. அந்த வீட்டில் வசித்த அவர்களுக்கு வருமானம் இல்லாததால் மினி ஒரு நூலகத்தில் பணிபுரிந்து மகனை வளர்த்து வந்தார்.
தனக்காக தாய் தனிமையில் படும் துன்பத்தை பார்த்து கோகுல் மனம் வருந்தினார்.
அப்போது கோகுல், ‘’நான் பெரிய ஆளாக வளர்ந்தபின் தாய்க்கு நல்ல வாழ்க்கைைய அமைத்து கொடுப்பேன்’’ என கூறி வந்தார். மினி தனக்கு கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து கோகுலை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்.
இன்ஜினியரிங் முடித்த கோகுல் தற்போது வேலையில் சேர்ந்துள்ளார். இப்போது தனது நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த வேணு என்ற முன்னாள் ராணுவ அதிகாரியை பார்த்து, அவருடன் தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு கோகுல் முன்னிலையில் மினி-வேணு திருமணம் நடைபெற்றது. இந்த தகவலை கோகுல் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘’நேற்று எனது தாயின் திருமணம் நடந்தது.
இப்படியொரு தகவலை வெளியிட வேண்டுமா என பலமுறை சிந்தித்தேன்.
2வது திருமணத்தை இந்த நவீன காலகட்டத்திலும் ஏற்றுக்கொள்ளாத ஏராளமானோர் உள்ளனர். ஆனாலும் வாழ்க்கை முழுவதும் எனக்காக தியாகம் செய்த எனது தாய்க்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தேன்.
எனது தாய்க்கு திருமண வாழ்க்கை கசப்பானதாகவே இருந்தது. எனது தந்தையின் துன்புறுத்தல் காரணமாக ரத்தம் சொட்ட சொட்ட நான் பலமுறை எனது தாயை பார்த்துள்ளேன்.
அப்போதெல்லாம் இப்படியொரு வாழ்க்கை வேண்டுமா? என கேட்பேன். அப்போது, உனக்காகத்தான் நான் வாழ்கிறேன்.
உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். எந்த கொடுமையையும் தாங்கிக்கொள்ளவேன்’’ என்றார்.
அப்ேபாதே எனது தாயின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்க வேண்டும் என முடிவு செய்தேன். இப்போது நான் படித்து முடித்து வேலையில் சேர்த்துவிட்டேன்.
நான் வேலைக்கு சென்ற பிறகு எனது தாய் தனிமையில் இருப்பார். எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்.
முதலில் அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் எனது வேண்டுகோளை ஏற்று சம்மதித்தார்.
இப்போது நான் நிம்மதியாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.
கோகுலின் இந்த பதிவுக்கு பேஸ்புக்கில் ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.
.