இந்தியா திரும்ப ஜாகிர் நாயக் நிபந்தனை

தினமலர்  தினமலர்
இந்தியா திரும்ப ஜாகிர் நாயக் நிபந்தனை

கோலாலம்பூர்: கைது செய்ய மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால், இந்தியா திரும்ப தயாராக உள்ளதாக சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர், ஜாகிர் அப்துல் கரீம் நாயக், 53; இஸ்லாமிய மத பிரசாரகர். மற்ற மதங்கள் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பும் வகையில் பேசி வருபவர். இது தொடர்பாக, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜாகிர் நாயக் மீது, தேசிய புலனாய்வு அமைப்பும் வழக்கு பதிவு செய்துள்ளது. இஸ்லாமிய ஆய்வு மையம் மற்றும் பீஸ் 'டிவி' ஆகியவற்றை நடத்துகிறார். பல்வேறு நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக, 193 கோடி ரூபாய் நிதி பெற்று, இந்தியாவில், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து உள்ளார்.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை, இவர் மீது வழக்குகள் தொடர்ந்துஉள்ளது. இதுவரை, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், ஜாகிர் நாயக், மலேஷியாவில் பதுங்கியுள்ளார். அங்கிருந்து, இவரை நாடு கடத்தி வர, மும்பை சிறப்பு நீதிமன்றம், கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. அவரை நாடு கடத்த மலேஷியா மறுப்பு தெரிவித்துள்ளது.



இந்நிலையில், ஜாகிர் நாயக் வெளியிட்ட அறிக்கை: என் மீது குற்றச்சாட்டுகள் மற்றும் புகார் இருந்தாலும், இந்தியாவிலோ அல்லது மற்ற நாடுகளிலிருந்தோ எனக்கு எதிராக எந்தவிதமான தீர்ப்பும் வழங்கப்படவில்லை. இந்திய விசாரணை அமைப்புகளின் வரலாற்றை அறிந்து, எனது வாழ்க்கையையும், எனக்கு உள்ள எஞ்சிய பணிகளையும் கெடுத்து கொள்ள நான் விரும்பவில்லை.
இந்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டிலிருந்து விடுபட விரும்புகிறேன். ஆனால் அந்த அமைப்புகள் நான், குற்றவாளியா , இல்லையா என்பது பற்றி விசாரிக்காமல், என்னை சிறையில் அடைக்க நினைக்கின்றனர். மலேசியாவில், நான் விசாரணை அதிகாரிகளை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளேன். இதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.
விசாரணை இல்லாமல், குற்றச்சாட்டு இல்லாமல், என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். இதனை பார்க்கும் போது, எனக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. இது போன்ற சூழ்நிலையில், என் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் வரை, கைது செய்ய மாட்டோம். சிறையில் அடைக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட் எழுதி கொடுத்தால், இந்தியா வர தயாராக உள்ளேன். இந்திய நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை