போராட்டம், பக்தர்கள் வருகை குறைவு: சபரிமலை கோயில் வருமானம் குறைந்தது
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் வருமானம் குறைவாக கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் கோயில் வருமானமும் அதிகரிப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சபரிமலையில் இளம் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இளம் பெண்கள் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் கூறினார்.
இதற்கு பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத், சபரிமலை கர்ம சமிதி உள்பட இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் போலீசார் இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் சபரிமலை உள்பட கேரளா முழுவதும் போராட்டம் வெடித்தது.
இதையடுத்து கடந்த மண்டல காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பகதர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.
இதனால் கோயிலுக்கு வருமானமும் குறைந்தது. கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலை கோயிலுக்கு கிடைத்த வருமானம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கோயிலுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ. 178 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 333 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முந்தைய வருடம் ரூ.
277 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 833 கிடைத்திருந்தது. முந்தையை வருடத்தை விட கடந்த வருடம் ரூ. 98. 66 கோடி குறைந்துள்ளது.