சாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாதனை முதல்வர் நவீன் பட்நாயக்இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் :5வது முறையாக 29ல் பதவியேற்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வராக 5வது முறையாக மீண்டும் நவீன் பட்நாயக் வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் 112 தொகுதிகளில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பாஜ 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளை மற்றுமே கைப்பற்றியது.

மக்களவை தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் 12  இடங்களிலும், பாஜ 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு  இடத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பிஜூ ஜனதா தளம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29ம் தேதி பதவியேற்கும்; தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளார்’ என்று தெரிவித்துள்ளது.



முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக முறைப்படி நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.   இவர், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜ வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தற்போது 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளது  குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை