மலேசிய விமானத்தில் கோளாறு : அவசரமாக தரையிறக்கம்
சென்னை : மலேஷியா செல்லும் விமானத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து, நேற்று பகல், 11:50 மணிக்கு, மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும், மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், 256 பயணியருடன் புறப்பட்டது. விமானம் பறக்கத் துவங்கிய சில நிமிடங்களில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி உணர்ந்தார்.சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,யை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.ஏ.டி.சி., அனுமதி அளித்ததை அடுத்து, அந்த விமானம், பகல், 12:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்திலேயே, தரையிறக்கப்பட்டது. விமான நிலைய ஓய்வு அறையில், பயணியர் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில், பைலட், இயந்திரக் கோளாறை கண்டறிந்ததால், 256 பயணியர் தப்பினர்.