தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியில் அமைச்சர் பதவி: தலைவர் பதவியை துறக்கிறார் அமித்ஷா?: இன்று மாலை பாஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியில் அமைச்சர் பதவி: தலைவர் பதவியை துறக்கிறார் அமித்ஷா?: இன்று மாலை பாஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம்

புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியின் அமைச்சரவையில் முக்கிய பதவி அமித் ஷாவுக்கு வழங்கப்பட உள்ளதால், அவர் பாஜ தேசிய தலைவர் பதவியை துறக்கவுள்ளார். இன்று மாலை பாஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம் மோடி தலைமையில் நடக்கிறது.

பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலர் இந்தியா வர உள்ளதால், அவர்கள் வரும் தேதியில் குழப்பம் நீடிக்கிறது. இதனால், மோடி விரும்பும் தலைவர்கள் வந்த பின்னரே பதவியேற்பு விழா நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரும் இன்று மாலைக்குள் டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்தவுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோருவார். அதன்பின், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு போன்ற நடைமுறைகள் குறித்த தேதி உறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பிரதமர் மோடி வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பாக, மோடி வாராணசி சென்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காந்திநகருக்குச் சென்று தனது தாயாரிடம் ஆசிர்வாதம் பெறவும் திட்டமிட்டுள்ளார்.

பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விழாவில் பங்கேற்க உறுதியளித்திருந்தாலும், தேதியை உறுதி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

அதனால், மோடி பதவியேற்பு விழா தேதியை அறிவிப்பதில் தாமதம் ஆவதாக செய்திகள் கூறுகின்றன.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, பதவியேற்பு விழாவில் சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்த விழாவைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதால், இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாக, பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பதவியேற்பு விழாவை அவசரகதியில் நடத்தி முடிக்க மோடி விரும்பவில்லை.   உலக தலைவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், அபுதாபி மன்னர் உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உறுதிெகாடுத்துள்ளனர்.

அதேபோல், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு வரும் தேதியை தீர்மானிப்பதில் இழுபறி நீடிப்பதால், பதவியேற்பு விழா தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.



இதற்கிடையே, முந்தைய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 11 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 34 இணை அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அமையவுள்ள அமைச்சரவையில் அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கூட்டணி கட்சியினருக்கும் சில இலாகா ஒதுக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. பாஜ பொறுத்தவரை தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் வெளியுறவு அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராக இருந்து சுஷ்மா சுவராஜ், உடல்நிலை காரணத்தால் ஓய்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.   தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலை அமேதியில் வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு, தற்போதைய அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளது.

மேலும் தற்போதைய அமைச்சரவையில் உள்ள நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பாஜ வெற்றி பெற்றுள்ளதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன்  தலைவராக ஒன்றரை ஆண்டு காலமாக பதவி வகித்த ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை  அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பாஜவின் புதிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். அவரது பதவிகாலம் 2016 ஜனவரியுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் 3 ஆண்டுகள் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

அந்த பதவிகாலமும் 2019 ஜனவரியுடன் முடிந்த நிலையில், மக்களவை தேர்தலால் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படாமல், தேர்தல் முடியும் வரை அமித் ஷா, தனது பணியை தொடர தீர்மானிக்கப்பட்டது. தற்போது தேர்தலில் பாஜ அபார வெற்றியை பெற்றதால், மீண்டும் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடக்கவுள்ளது.



இதில், மத்திய அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர் தனது தேசிய தலைவர் பதவியை துறக்கவுள்ளார். ஏற்கனவே பதவிகாலம் முடிந்த நிலையில், தற்போது அதற்கான சூழ்நிலை வந்துள்ளதால், பாஜவுக்கு புதிய தேசிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மத்திய அரசு அமைந்தவுடன் அதற்கான வேலைகளை பாஜ தலைமை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுநாள் வாரணாசி பயணம்:  பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாளை மாலை (மே 26) குஜராத்தில் உள்ள எனது தாயாரை சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெறவுள்ளேன். நாளை மறுநாள் (மே 27) காலை என்னை வெற்றிபெறச் செய்த வாரணாசி தொகுதியின் காசிக்கு சென்று மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.



பதவியேற்பு ஹைலைட்ஸ்
* ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், அபுதாபி, ஜெர்மன், பிரான்ஸ், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
* அதிக வெற்றிக் கொடுத்த மேற்குவங்கம், ஒடிசா, தெலங்கானா மாநில எம்பிக்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம்.


* சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் அமைச்சரவையில் இடம்பெறுவது சந்தேகம்.


* ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு இலாகா மாற்றம்.
* நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மாலை 5 மணிக்கு பாஜ, கூட்டணி எம்பிக்கள் கூட்டம்.
* அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிகாலம் கடந்த ஜனவரியோடு முடிந்தது.
* முந்தைய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட், 11 இணை (தனி பொறுப்பு), 34 இணை அமைச்சர்கள் இருந்தனர்.

.

மூலக்கதை