பாஜ மீண்டும் ஆட்சி அமைப்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் கட்டாயம்

தினகரன்  தினகரன்
பாஜ மீண்டும் ஆட்சி அமைப்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் கட்டாயம்

சென்னை: நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக அமல்படுத்த முடியாத சூழலால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட் தேர்வுக்கு உச்ச நீதிமன்றத்தில் விலக்கு கோரின. ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஓராண்டுக்கு விலக்கு கிடைத்த நிலையில், 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி தமிழக சட்டசபையில் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து  விலக்கு கோரி, 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்ததால், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று தரவில்லை. இந்நிலையில் 2017, 2018, இந்த ஆண்டு மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையத்துக்குள் மாணவர்களை அனுமதிப்பதற்கு முன், பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் நீட் தேர்வு மையத்துக்கு சென்ற மாணவர்களுக்கு, சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. நாடு முழுமைக்குமான ஒரே நடைமுறை என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் கூட அதிக அளவில் தோல்விடையும் வட இந்திய மாணவர்கள், எவ்வாறு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப்படிப்பில் சேர்கிறார்கள். ஏதேனும் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகமும் தொடர்கிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் தரப்பில் நீட் தேர்வு தொடர்பாக, அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கோரவில்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, மக்களவை தேர்தலில் பாஜ மீண்டும் வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு தொடரும் என்று கூறப்படுகிறது

மூலக்கதை