செக்.குடியரசு நாட்டில் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி
செக் குடியரசு நாட்டில், ஹோட்டலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், 9 பேர் உயிரிழந்தனர். கிழக்கு பகுதியில் அமைந்துள்ள உர்ஸ்கை பிராட் நகரின் ஹோட்டல் ஒன்றில் நுழைந்த 60 வயதுமிக்க முதியவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ஹோட்டலில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர், ஒருவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து அந்த பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, துப்பாக்கிச் சூடு நடத்திய முதியவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் போகுஸ்லாவ் சோபோட்கா, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக அந்த முதியவர், தொலைக்காட்சி நிலையத்தை தொலைபேசி வாயிலாக அழைத்து தம்முடைய பிரச்னைகளுக்கு போலீசார் தீர்வு காணவில்லை எனவும் தாமே அதற்கு தீர்வு காண இருப்பதாகவும் கூறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல் இல்லை என செக் குடியரசு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.