பாஜ கூட்டணியில் இருந்து கொண்டே ராகுல், பிரியங்காவை புகழ்ந்து தள்ளிய சிவசேனா
மும்பை; மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணியில் இருந்து கொண்டே, தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதாக கூறி, ராகுல் மற்றும் பிரியங்காவை சிவசேனா கட்சி புகழ்ந்து தள்ளியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு, நாளை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகள் வரை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஆருடம் கூறுகின்றன. இந்நிலையில், பாஜ கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியின் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று யாரும் கூறத் தேவையில்லை.
ஏனெனில், மக்கள் எல்லோரும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜ கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும். கடந்த மக்களை தேர்தலில் எதிர்க்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
ஆனால் இம்முறை, மத்தியில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகி விடும்; ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகிவிடுவார். இது, ராகுலுக்கு கிடைத்த வெற்றி.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கடின உழைப்பிற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும். தேர்தல் பிரசாரத்தில் சிறப்பாக இருவரும் பணியாற்றினார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாஜ கூட்டணியில் இருந்து கொண்டே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்காவை பாராட்டி சிவசேனா கட்சியில் கட்டுரை வந்திருப்பது, மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.